Tuesday, April 28, 2009
மதுபான பழக்கம் : உச்ச நீதிமன்றம் மிகுந்த கவலை
கொரிய செல்பேசிகள் வேண்டாம்
விலை குறைவாகவும், அதே சமயம் அதிக வசதிகளுடனும் இருக்கிறது என்று கொரியன் அல்லது சீன செல்பேசிகளை வாங்க வேண்டாம்.ஏன் என்றால், ஏற்கனவே இருக்கும் கொரியன் மற்றும் சீன செல்பேசிகளின் இணைப்புகள் வரும் ஜனவரி 6ஆம் தேதியுடன் துண்டிக்கப்பட உள்ளன.
அன்றைய தினம் இதுபோன்ற 2.5 கோடி செல்போன்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைப்பை துண்டிக்கப் போகின்றன.இதற்குக் காரணமும் உண்டு...முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் செல்பேசிகளில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்பேசி கருவி அடையாள எண்) எண் இருக்கும்.
ஆனால் இந்த கொரியன் செல்பேசிகளில் இந்த எண் இருக்காது. இந்த ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத கொரிய செல்பேசிகளை ஒருவர் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க முடியாது. மேலும், இந்த செல்பேசியைப் பயன்படுத்தி தீவிரவாதிகளும், குற்றவாளிகளும் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
எனவே நாட்டின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, ஐ.ம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்தே, ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்பேசிகளுக்கு சேவையை துண்டிக்குமாறு செல்பேசி நிறுவனங்களை தொலைத் தொடர்பு துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து இந்த நடவடிக்கை ஜனவரி 6ஆம் தேதி அமலாகிறது
மலேசியாவில் அனுமதி கட்டணம் இரட்டிப்பு
மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆண்டு வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பாக்கியதால், தமிழகத்தை சேர்ந்த 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவே மலேசியாவில் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் உள்ளன.
இந்திய, சைனீஸ், மேற்கத்திய உணவுகள் சமைப்பதில் தமிழக தொழிலாளர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளதால், இந்த ஓட்டல்களில் ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதுதவிர தோட்ட வேலை, தொழிற்சாலைகளில் தமிழகத்தை சேர்ந்த 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மலேசியாவையும் விட்டுவைக்கவில்லை. அதனால், உள்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க மலேசிய அரசு முடிவெடுத்துள்ளது.
இப்போது மலேசியாவில் பணிபுரியும் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வேலை உரிமை கட்டணத்தை புதுப்பிப்பதற்கு 1,800 மலேசிய வெள்ளியும், தங்குமிட கட்டணமாக 200 வெள்ளியும் அரசுக்கு கட்ட வேண்டும். இந்நிலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை புதுப்பிப்பு கட்டணமாக ஆண்டுக்கு 3,600வெள்ளியும், தங்குமிடத்துக்கு 400 வெள்ளியும் செலுத்த வேண்டும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தமிழக தொழிலாளர்கள் தலைகளில் பேரிடியாக இறங்கி உள்ளது. அவர்களுக்கு குறைந்த பட்சமாக 600 வெள்ளியில் இருந்து அதிகபட்சமாக 1,500 வெள்ளி வரை ஊதியம் கிடைக்கிறது.
தமிழகத்தில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் ரூ.1 லட்சம் வரை செலவழித்து அங்கு செல்கின்றனர். இப்போது வேலை உரிம கட்டணத்தை இரட்டிப்பு ஆக்கியதால் ஆண்டுக்கு 4,000 வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ.55,000) செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அவ்வளவு பணத்தை செலுத்த முடியாத தமிழக தொழிலாளர் 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் வேலை வாய்ப்பு உரிம கட்டணம் இரட்டிப்பாகிறது. இதனால தமிழக தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்து நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது
ஆங்கிலக் கல்வி மையம்
ஆங்கில மொழியில் வல்லமை பெறுவதற்கான கல்வி மையம் ஒன்றை பிரிட்டிஷ் கவுன்சில் விரைவில் சென்னையில் துவங்க திட்டமிட்டுள்ளது.தொழில் மற்றும் சுய முன்னேற்றம் ஆகிய நலன்களுக்காக இங்கு ஆங்கில மொழி வகுப்புகள் நடைபெறும். பாடத் திட்டங்கள் இந்தியர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாம் காலக் கட்டத்திற்கான பதிவுகள் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வகுப்புகள் 4ஆம் தேதி துவங்குகின்றன.ரெகஸ் சிட்டி சென்டரில் முதலில் 3 வகுப்பறைகளை திறக்கவுள்ளது. அண்ணாசாலையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் வளாகம் புணரமைக்கப்பட்டு வருவதால் அதுவரை இங்கு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிகிறது.இந்த ஆங்கில வகுப்புகளுக்காக இந்தியாவிலிருந்து 12 ஆசிரியர்களும், பிரிட்டனிலிருந்து 3 கல்வியியல் துறை மேலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கென்றே உயர்கல்வி தகுதி பெற்றவர்கள். அதாவது செய்தல் வழி கற்றல் என்ற புதிய முறைகளின் படி பாடம் நடத்தப்படும்.3 பெரும் பிரிவுகளின் கீழ் இந்த மையத்தில் ஆங்கிலக் கல்வி அளிக்கப்படுகிறது.
1. ஆங்கில பரிணாமம் (English Evolution):
இதில் ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் வாசித்தல், இலக்கணம் அருஞ்சொற்பொருள் ஆகியவை கற்றுத் தரப்படும்.
2. ஆங்கில எக்சிகியூட்டிவ் (English Executive): இந்தப் பிரிவின் கீழ் பணியிடத்தில் ஆங்கிலத்தில் மற்றவர்களுடன் தொடர்புகொள்வது குறித்த பாடங்கள் இடம்பெறும்.
3. ஆங்கில தாக்கம் (English Impact): நேர்முகத் தேர்வுகள், குழு விவாதங்கள், மற்றும் மேடைப் பேச்சு ஆகியவற்றில் தன்னம்பிக்கை பெறத் துடிப்பவர்களுக்கு இந்த பாடத்திட்டம் உதவும்.பதிவு செய்யப்படுவதற்கு முன் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும். அதாவது அவரவர்களுக்கு பொருத்தமான பிரிவு எது என்பதை அறிய இது நடத்தப்படுகிறது. இது எழுத்து வழி தேர்வு, வாய்மொழி நேர்காணல் மற்றும் ஆசிரியருடன் ஆலோசனை அமர்வு ஆகிய வழிமுறைகளில் நடத்தப்படும்.
ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் 7 வார காலங்களுக்கு 42 மணி நேரங்கள் வகுப்புகள் நடைபெறும்.
இந்த கல்விக்கான கட்டணம் ரூ.6,500 முதல் ரூ.7.000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் பாடப் புத்தகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் நூலக உறுப்பினர் அட்டை ஆகியவையும் உள்ளடங்கும்.பு
து டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலக் கல்வி மையத்தில் ஆண்டு தோறும் 7,000 மாணவர்கள் ஆங்கிலம் கற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்களுக்கு 044 4205 0600 என்ற தொலை பேசி எண்ணை அணுகவும்.
ஏழை மாணவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகலாம்
மாணவர்களே ஏழ்மை ஒரு தடை அல்ல. லட்சியம் இருந்தால் ஏழை மாணவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம் என்று காவல்துறை தலைமை ஆய்வாளர் சைலேந்திரபாபு கூறினார்.பிளஸ்-2 படித்துவிட்டு உயர் கல்வியில் என்ன பாடத்தை எடுத்து படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றியும், பட்டபடிப்பு படித்த மாணவர்களுக்கு எத்தகைய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்பது பற்றியும் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை புழல் ஸ்ரீநல்லழகு பாலிடெக்னிக்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் காவல்துறை தலைமை ஆய்வாளர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து பேசினார். "மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து பாடத்தை நன்றாக படியுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தலைமைக் காவலர் ஒருவர் தனது வீட்டை விற்று மகனை பொறியியல் படிக்க வைத்திருக்கிறார். இதே போல தாலியை விற்றாவது படிக்க வைக்கவேண்டும் என்று தாய் நினைக்கிறார்.யார் என்ன செய்தாலும் படிக்க வேண்டியது மாணவர்கள் தான். எந்த படிப்பு படித்தாலும் வேலை உறுதி. ஆனால் படிக்கும் படிப்பில் சிறந்து விளங்கவேண்டும்.இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் ஜா என்பவர் அமெரிக்காவில் உள்ள மோட்டோரோலா கம்பெனியில் தலைமை அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய வருட சம்பளம் 520 கோடி. அதற்கு காரணம் அவருடைய திறமை.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 21 தாண்டியிருக்க வேண்டும். பிற்பட்டோர் 33 வயதுவரை எழுதலாம். தாழ்த்தப்பட்டோர் 35 வயது வரை எழுதலாம்.3 கட்ட தேர்வுகள் உண்டு. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் உண்மையாக பதில் அளிக்கவேண்டும். அந்த நேரத்திற்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும் (பிரசென்ஸ் ஆப் மைண்ட்) தமிழில் கூட எழுதலாம்.விடா முயற்சி இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம். நான், இறையன்பு போன்றவர்கள் எல்லாம் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்கள் தான். முயற்சியின் காரணமாக இந்த பதவியை அடைந்து இருக்கிறோம்.
கல்லூரியில் படிக்கும்போதே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். நிறைய ஆங்கிலத்தில் பேச பயிற்சி பெறுங்கள். இரு கைகள் இல்லாதவர்கள் கூட எத்தனையோ சாதனை புரிந்துள்ளனர். காரணம் அவர்களின் தீராத ஆர்வம்.எனவே முயற்சி செய்தால் ஏழ்மை ஒரு தடையாக இருக்க முடியாது. விடா முயற்சி இருந்தால் நினைத்த இலக்கை எய்த முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாகலாம்" என்றார். இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.