Tuesday, April 28, 2009

ஏழை மாணவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகலாம்

மாணவர்களே ஏழ்மை ஒரு தடை அல்ல. லட்சியம் இருந்தால் ஏழை மாணவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம் என்று காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் சைலேந்திரபாபு கூறினார்.பிளஸ்-2 படித்துவிட்டு உயர் கல்வியில் என்ன பாடத்தை எடுத்து படித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றியும், பட்டபடிப்பு படித்த மாணவர்களுக்கு எத்தகைய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்பது பற்றியும் வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை புழல் ஸ்ரீநல்லழகு பாலிடெக்னிக்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் காவ‌ல்துறை தலைமை ஆ‌ய்வாள‌ர் சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு குறித்து பேசினா‌ர். "மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவது, சினிமா, டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து பாடத்தை நன்றாக படியுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தலைமை‌க் காவல‌ர் ஒருவர் தனது வீட்டை விற்று மகனை பொ‌றி‌யிய‌ல் படிக்க வைத்திருக்கிறார். இதே போல தாலியை விற்றாவது படிக்க வைக்கவேண்டும் என்று தாய் நினைக்கிறார்.யார் என்ன செய்தாலும் படிக்க வேண்டியது மாணவர்கள் தான். எந்த படிப்பு படித்தாலும் வேலை உறுதி. ஆனால் படிக்கும் படிப்பில் சிறந்து விளங்கவேண்டும்.இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் ஜா என்பவர் அமெரிக்காவில் உள்ள மோட்டோரோலா கம்பெனியில் தலைமை அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவருடைய வருட சம்பளம் 520 கோடி. அதற்கு காரணம் அவருடைய திறமை.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வயது 21 தாண்டியிருக்க வேண்டும். பிற்பட்டோர் 33 வயதுவரை எழுதலாம். தாழ்த்தப்பட்டோர் 35 வயது வரை எழுதலாம்.3 கட்ட தேர்வுகள் உண்டு. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வு எழுதலாம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் உண்மையாக பதில் அளிக்கவேண்டும். அந்த நேரத்திற்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும் (பிரசென்ஸ் ஆப் மைண்ட்) தமிழில் கூட எழுதலாம்.விடா முயற்சி இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறலாம். நான், இறையன்பு போன்றவர்கள் எல்லாம் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவர்கள் தான். முயற்சியின் காரணமாக இந்த பதவியை அடைந்து இருக்கிறோம்.

கல்லூரியில் படிக்கும்போதே பொது அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். நிறைய ஆங்கிலத்தில் பேச பயிற்சி பெறுங்கள். இரு கைகள் இல்லாதவர்கள் கூட எத்தனையோ சாதனை புரிந்துள்ளனர். காரணம் அவர்களின் தீராத ஆர்வம்.எனவே முயற்சி செய்தால் ஏழ்மை ஒரு தடையாக இருக்க முடியாது. விடா முயற்சி இருந்தால் நினைத்த இலக்கை எய்த முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாகலாம்" எ‌ன்றா‌ர். இவ்வாறு சைலேந்திரபாபு பேசினார்.

No comments:

Post a Comment